மறலி கை தீண்டா மெய்வழிமதம்:
மின்சாரம் கிடையாது, ஆடம்பர பொருட்கள் ஏதும் இல்லை. வீடுகளுக்கு கதவுகள் கூட கிடையாது. விளக்கொளி மட்டுமே அங்கு பிரதானம். இரவு இன்றும் அங்கு இரவாகவே உள்ளது. இப்படியொரு அதிசய கிராமம் நம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
கீரனூர்- அன்னவாசல் சாலையில் கிழக்குறிச்சிக்கு அருகேயுள்ளது, மெய்வழிச்சாலை எனும் இவ்வூர். ஊரின் உள்ளே வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. நடந்துதான் போகவேண்டும். இப்படி இந்த ஊரை மாற்றியவரை பற்றி காண்போம்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர் காதர்பாட்ஷா, தன் சிறுவயதில் மரணம் பற்றி ஓர் பிரசங்கம் கேட்டார். அதில் நரகம் குறித்து விவரிக்கப்பட, நரகம் பற்றிய பயம் அவரை வாட்டியது. மனைவி, மக்களை விட்டு தினமும் ஒரு சாமியாரை தேடி சொர்க்கம் பற்றி வினவுவதையே வழக்கமாய் கொண்டார்.
வள்ளலாரின் குருவான தணிகைமணியாரை சந்தித்து அவரது போதனைகளால் உந்தப்பட்டு 12 ஆண்டுகள் அவருடன் இருந்தார். இல்லறம் மறந்தார். திருப்பரங்குன்றத்தில் 12 ஆண்டுகள் தவம்புரிந்து சொர்க்கத்தின் திசையை அறிந்தார். மதுரையில் புதர்மண்டிய புறம்போக்கு காடினை சீர்செய்து பெரிய குடில் அமைத்தார். பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார், மதுரை பிரிட்டிஷ் கவர்னர் வேவல்துறை அக்குடிலை கண்டு பிரம்மித்து அரசாங்க பணிக்கு இவ்விடத்தை தரும்படி கேட்டார். மறுபேச்சின்றி அவ்விடத்தை வழங்கினார் காதர்பாட்ஷா. அதற்கு ஈடாக ஒருலட்சம் ரூபாய் வெகுமானமாய் தந்தார் கவர்னர். அக்காலத்தில் அந்ததொகை கிட்டத்தட்ட 100 கோடிக்கு சமம். அவ்வளவு பணத்தை கொண்டு செல்வது கடினம் என உணர்ந்து அவற்றை தங்கக்கட்டிகளாய் மாற்றி சுமந்து வந்து புதுக்கோட்டை அடைந்தார். அன்று பாப்பநாச்சிகுளம் என அழைக்கப்பட்ட பகுதியில் 22 ஏக்கர் நிலம் வாங்கினார். கருவேலமரம் நிறைந்த காட்டை திருத்தி குடில்களை அமைத்தார். தங்கக்கட்டிகளை பூமிக்கு அடியில் புதைத்து வைத்தார்.
தான் உணர்ந்த இக்கோட்பாட்டை உலகம் உணர வைக்க "மறலி கைதீண்டா மெய்வழி மதம்" என்ற புதுமதத்தை தோற்றுவித்தார். அதாவது எமனின் கைபடாத மதம் என பொருள்.மரணத்தை வெல்லும் வழியை கூறுகிறேன் என அழைப்புவிடுத்த இவரது சொல்லைக்கேட்டு எண்ணற்ற தொழிலதிபர்கள், வசதிபடைத்தவர்கள் குவிந்தனர். பலர் தாம் பார்த்துகொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கூட வந்தனர்.அவர்கள் காதர்பாட்ஷாவை "ஆண்டவர்" என அழைத்தனர். அவர்களை பாட்ஷா "அனந்தர்கள்" என அழைத்தார். அதன்பின் ஆயிரத்து இருநூறு வீடுகள் பெரும் சுவரெழுப்பி கட்டினார் பாட்ஷா.அதில் நிரந்தரமாய் அவருக்கு சேவைசெய்ய 600பேரும், ஏனையர் வெளியேவும் தங்கி கொள்கையை வளர்க்க வேண்டும் என்றார்.
பூமியில் புதைத்த தங்கம் பற்றிய தகவல் பல வழிகளில் இட்டுகட்டி பரவியது. அன்றைய அரசியல்வாதிகள் கண்ணையும் உறுத்தியது. இந்திராகாந்தி அம்மையார் வரையிலும் இக்கதை பரவி, அங்கு திடீர்சோதனை கூட நடத்தப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட தங்கம் செங்கல் செங்கலாய் உருக்கி வடிக்கப்பட்டிருந்தது. ஒரு கண்காட்சியாக கூட இது சிலகாலம் வைக்கப்பட்டது. இது தொடர்பாய் சட்டப்போராட்டம் கூட நடந்தது. இதனிடையே 1976 ல் காதர்பாட்ஷா இறந்தார். அவரது உடல் வைக்கப்பட்ட இடம் இன்று "பொன்னரங்ங தேவாலயம்" என அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூரில் ஜாதி, மத, இன பேதம் இன்றுவரை கிடையாது.
அனந்தர்கள் பெயருக்குமுன் "மெய்வழி" என்றும், இம்மதத்தை பின்பற்றுவோர் தங்கள் பெயருக்குமுன் "சாலை" எனவும் அடையாளப்படுத்தி வருகின்றனர்.
இங்கே ஒருவர் இறந்தால் அவர்களது உறவினர் உட்பட எவரும் அவர்களை எண்ணி அழுவதில்லை, மாறாக அடக்கம் செய்யும் வழிவரை சிரித்துக்கொண்டே வருகின்றனர். கணவர் இறந்தபிறகும் பெண்கள் தாலியறுப்பதில்லை, பூ பொட்டுகூட வைக்காமல் இருப்பதில்லை.மாலை ஆறுமணி மேல் வெளியூரார்கள் இங்கே தங்க அனுமதிப்பதில்லை. ராத்திரி முழுவதும் ஒருகுழு பாதுகாப்புக்காக ஊரைச்சுற்றி வலம் வருகின்றனர். மொத்தம் இங்கு 69 ஜாதியினர் அனந்தர்களாக உள்ளனர். கண்டிப்பாக தமிழில்தான் குழந்தைகளுக்கு இங்கே பெயர் வைக்கப்படுகிறது.
பாட்ஷாவின் முதல்மனைவிக்கு பிறந்த ஆயிஷா இன்று 100 வயதை கடந்துவிட்டார்.
அமைதியை நாடிசெல்வோருக்கு சொர்க்கமாகவும், ஆய்வுநோக்கில் செல்வோருக்கு மர்மதேசமாகவும் காட்சியளிக்கிறது "மெய்வழிச்சாலை"

No comments:
Post a Comment