Tuesday, 21 July 2020

காளிதேவி தரிசனம்

அமானுஷ்ய அனுபவம்-16

காளிதேவி தரிசனம்:

Disclaimer :
இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விஷயம் தான், எனக்கும் இதுல அனுபவம்லா இல்லை, பிருங்கிமுனி மாந்திரீகம், அகத்தியர் மாந்திரீகம், மாந்திரீகபோதினி எனும் நூலில் கொஞ்சம் Reference எடுத்து எழுதிருக்கேன், கொஞ்சம் சுவாரஸ்யமா இருந்ததால Share பன்றேன்.

சூரியதாரணை அப்பியாசம்:
அதிகாலை எழுந்து, மல,ஜலம் கழித்துவிட்டு நீர்நிலையில் முக்கியமாய் கடலாய் இருந்தால் உத்தமம், சூரியனின் உதயத்தை ஆரம்பத்திலிருந்து காணவேண்டும். கண்களை நன்றாய் சூரியனின் மையத்தை நோக்கி காணவேண்டும். அவ்வாறு காணுகையில் கண்களில் கிரணம் ஏற்படும்! அவ்வாறு கிரணம் ஏற்ப்பட்டவுடன் பார்க்கக்கூடாது. இவ்வாறு தினமும் பார்த்து கண்களை பழக்கியதும் ஒளியின் பிரகாசத்தை நேராய் காணும் பலத்தினை கண்கள் பெற்றுவிடும். இந்த பயிற்சி அப்பியாசம் எனப்படும். இதற்கு நாள் கணக்கு கிடையாது. நமக்கே என்று பயிற்சிபூரணமடைந்து என தோன்றியதோ அப்போது நிறுத்தி விடனும்.

தீபஒளி அப்பியாசம்:

தனித்த ஒரு அறையில் ஆமணக்கு எண்ணையால் விளக்கு ஏற்றி, காற்று உட்புகாத அறையால், ஒரு கட்டைவிரல் அளவு தீபம் எரியுமாறு தூண்டிவிட்டு சுத்தாசணம் போட்டு அமர வேண்டும். மனதை ஒருநிலைபடுத்தி கண்களின் ரப்பை அசையாமல் தீபத்தை உற்றுநோக்க வேண்டும்,ஒருமணிநேரம் இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.குறைந்தது ஒருமாதகாலம் இப்பயிற்சியை மேற்கொள்ளவும்.

இருட்டறை அப்பியாசம்:

மேற்கண்ட பயிற்சியினில் தேறியபின் மையிருட்டு என கூறும்வண்ணம் ஒலி, ஒளி மாசில்லாத சூழலை உருவாக்கி, தான்வாடும் மூச்சுசப்தம் மட்டும் பேரிரைச்லாய் கேட்கும் வரை, மனதை ஒருநிலைப்படுத்தி சிந்தனையை நெற்றியின் நடுவே நிறுத்த வேண்டும். சில மந்திரங்கள் உண்டு அதனைக்கூறி வர அதிகபட்சம் ஒரு மண்டலத்தில் கண்முன்னே ஒளி தோன்றும்.நாளாக நாளாக அந்த ஒளியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வரும். இதில் மிகச்சிரத்தையாய் செய்பவர் பதினைந்தடிதூரம் வரை அந்த ஒளியை ஏவ முடியும். இவ்வொளியை மிருகங்களிடம் பிரயோகித்து பரிசோதனை செய்து, நெருக்கமானவர்களிடம் ஏவி சோதித்து, பயிற்சி கூட கூட எவர்மேலும் பிரயோகம் செய்யும் ஆற்றல் கூடி வரும்.

காளி வசிய மந்திரம்:

காளியென்றால் உலகமெல்லாம் கதறிநிற்கும்
காலமறிந்த அருமைத்தாய் வசியஞ்செய்வேன்
வாளிதொடு ஓம் சிவசிவா வென்ற சக்தி
வரணிக்க தேவியே காளிசத்தி
நாளறிந்து நலமறிந்து என் முன்னின்று
நானவில்லும் பகைவரெல்லாம் நசித்துபோக
கோளரியே நீ செய்வாய் தள்ளி தள்ளி
குணந்தந்து குறைமொழியாய் கும்பிட்டேனே

என்ற மந்திரத்தை குளித்து வெண்பட்டாடை அணிந்து தலையில் நீறுதரித்து, அதன்மேல் குங்குமமிட்டு,  புழுங்கலரிசி சோறிட்டு கோழியும், அதில் முட்டையும் பாலும் சமைத்து, பால் பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு வைத்து, சூடம், புஷ்பம் இளநீர் இவற்றை வாழையிலையில் பரப்பிவைத்து 1008 தரம் மேல்கண்ட மந்திரத்தை கூறினால் காளிதேவி பிரசன்னமாவாள், அப்போது பிரகாசமான ஒளிதோன்றும் கொஞ்சமும் பயப்படாமல், இன்றுமுதல் என்னுடன் வருவாய் அகிலமாதா என திருவடியை பணிவாய் சரணடைய வேண்டும்.

இது பழைய ஓலைச்சுவடி படியெடுத்து, கொரக்கோட்டை வடிவேலு செட்டியார் என்பவரால் பதிக்கப்பட்டது. சரி முயற்சி பண்ணி பாப்போம். காளியை பாத்திர வேண்டிதான்.

Saturday, 27 June 2020

Dear David

அமானுஷ்ய அனுபவம்-15

Dear David :

ஆடம் எலைஸ் எனும் அமெரிக்கர் ஓர் இணைய விரும்பி, தனது அன்றாட நிகழ்வுகளை தினமும் சமூகவலைத்தளமான டிவிட்டரில் பதிவேற்றுவார். ஒருமுறை டிவிட்டரில் இன்று ஒரு அமானுஷ்யத்தை உணர்ந்தேன் என பதிவிட்டார், அவரது Followers என்னவென கமெண்ட் செய்ய, தொடர்ந்து மூன்று நாட்களாய் ஒரு சிறுவன் கனவில், தோன்றுகிறான் என பதிலுறைத்தார். பொதுவாக அனைவரின் கனவும் வெவ்வேறு இடங்களிலேயே பெரும்பாலும் தோன்றும், ஆனால் தனது கனவோ தனது படுக்கையறையிலேயே தோன்றுகிறது, அதுவும் எனது அறையிலுள்ள பச்சை நிற நாற்காலியில் அவன் அமர்ந்து எனை பார்க்கிறான் என ட்வீட் செய்தார். அவரது இந்த ட்வீட்டை பெரும்பாலானோர் கிண்டல் செய்து திட்டி பதிவிட்டனர். ஒருசிலர் ஆடமை மதித்து அந்த சிறுவனின் உருவம் எப்படி இருந்தது என கேட்டிருந்தனர். ஆடமும் யோசித்து தன் கனவில் வந்த தலைசிதைந்த அவ்வுருவத்தை வரைந்து ட்வீட் செய்தார். இக்கனவு தினமும் தொடர்ந்தது. தினமும் கனவில் அந்த சிறுவனும், ஆடமும் நேருக்குநேர் பார்த்தவாறு இருந்தனர். ஒருநாள் அச்சிறுவன் நாற்காலியை விட்டு எழுந்து ஆடம்மை நோக்கி அருகே கிட்டே வர, பதறியடித்து எழுந்தார் ஆடம். அதன்பின் மறுநாள் புதிதாக நூலகத்தில் இருக்குமாறு ஒரு கனவு வந்தது! அங்கே ஒரு பெண் ஆடம்மை நோக்கி வந்து, நீங்கள் தானே டேவிட்டை கண்டீர்கள்? என வினவ, தான் எந்த டேவிட்டையும் காணவில்லை என்றார். அதற்கு அப்பெண் அச்சிறுவன் பெயர்தான் டேவிட் என்றாள். மேலும் அவள் ஆடமிடம், முக்கியமாய் அந்த மூன்று கேள்விகளை மட்டும் டேவாட்டிடம் கேட்டு விடாதீர்கள், என கூறி மறைந்தாள்.

இப்போது அச்சிறுவனின் பெயர் டேவிட் என தெரிந்து. இதையும் ட்வீட் செய்து, மறுநாள் கனவுக்காக காத்திருந்தார். இரண்டு நாள் வேறு ஏதோ கனவு வர, மூன்றாம் நாள் அதே நாற்காலியில் அச்சிறுவன் அமர்ந்திருந்தான். அப்போது அச்சிறுவன் ஆடம்மை பார்க்க! ஆடம்,
 "டியர் டேவிட் உன் தலையில் ஏன் இந்த காயம்? என கேட்க, முகத்தை எங்கோ திருப்பி சூப்பர் மார்க்கெட்டில் விபத்து நடந்தாய் கூறினான் டேவிட்.
"சூப்பர் மார்க்கெட்டில் எங்கே விபத்து நடந்தது?" என கேட்க,
மீண்டும் முகத்தை எங்கோ திருப்பி, அங்கே ஒரு செல்ஃபில் விபத்து நடந்தது என கூறினான் டேவிட்.
அடுத்ததாய் எவரேனும் உன்னை தலையில் தள்ளி விபத்தை ஏற்படுத்தினாரா? அல்லது தற்செயலா என கேட்டார் ஆடம்.

முகத்தை ஆடம்க்கு நேராய் திருப்பி நாற்காலியை விட்டு இறங்கி கோபத்துடன் வந்தான் டேவிட். பதறியடித்து எழுந்தார் ஆடம், அப்போதுதான் முந்தைய கனவில் ஒரு பெண், டேவிட்டிடம் அந்த மூன்று கேள்வியை கேட்காதே என கூறியது நினைவில் வந்தது! அதன்பிறகு சிலநாள் டேவிட் வரவில்லை கனவில். ஆனால் அதன்பிறகு டேவிட்டை தேட ஆரம்பித்தார் ஆடம். செய்திதாள்களை சேகரித்து பார்த்தார், டேவிட் என்ற சிறுவன் சூப்பர்மார்க்கெட் விபத்தில் இறந்தானா! என தேடினார். ஆனால் அப்படியொன்றும் செய்தி கிட்டவில்லை. இது வெறும் கனவுதான் என நிம்மதியடைந்தார். அப்போதுதான் ஒன்றை கவனித்தார், அவரது வீட்டிலிருந்த இரு பூனைகள் தினமும் இரவு வீட்டின் கதவு அருகே மோப்பம் பிடித்தவாறு நின்று எதையோ பார்த்துகொண்டிருப்பதை கவனித்தார். தொடர்ந்து ஆறாவது நாளாய் நள்ளிரவில் இச்சம்பவம் நடந்தது. அப்போது கேமராவிலும், மொபைலிலும் அக்காட்சியை பதிவு செய்தார். அப்போது கேமராவில் எடுத்த புகைப்படத்தில் அக்கதவுக்கு பின்னாளிருந்த இடம் கருப்பாகவும், மொபைலில் எடுத்தது சாதாரணமாகவும் இருந்தது. இதனையும் அவர் ட்வீட் செய்தார். அவருடைய Followers அந்த இருண்ட காட்சியை Bright செய்து பார்த்ததில் அதில் ஒரு உருவத்தின் பார்டர் தெரிவதாய் கமெண்ட் செய்தைதிருந்தனர். ஆடமும் அதனை பார்த்து அதிர்ந்தார். மறுநாள் அதை யோசித்துகொண்டே உறங்கிபோனார். அன்றைய கனவில் டேவிட் அவரை கையை பிடித்து இழுத்து எங்கோ சென்றான்.மறுநாள் குளிக்க செல்கையில் தன்கையை அப்போதுதான் கவனித்தார், கைமணிக்கட்டில் இரத்தம் உறைந்த சுவடு தெரிந்தது. அருகே பார்த்ததில் ஒருவன் கையை பிடித்தால் பதியும் அச்சு மாதிரி இருந்தது. அன்று இரவு டேவிட் வந்தான் அவனிடம் பேச முற்படுகையில் அவன் உடனே சேரைவிட்டு எகிறி ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே சென்றான். இது அவருக்கு கனவு போல் தோன்றாமல் உண்மையாய் நடப்பதாய் தோன்ற உடனே எழுந்தார் ஆடம். அங்கே கண்ணாடி உடைந்திருந்தது.அது பனிகாலமாததால் அச்சிறுவனின் பாத அச்சு தெளிவாக தெரிந்தது. அதனை தொடர்ந்து சென்று பார்த்தார். ஒருகட்டத்தில் அது நின்றது. அதன்பின் குழப்பம் கலந்த பயத்துடன் வீடு திரும்பினார்.
அன்று இரவு ஒரு வீடியோ கேமிரா தன் அறையில் செட் செய்து படுத்தார். அக்கேமரா நொடிக்குநொடி நிகழ்வினை காட்சிபடுத்தியது. காலையில் பார்த்த ஆடம் பயத்தில் உறைந்தார், காரணம் ஒரு சிறுவனின் உருவம் படுக்கையை சுற்றி சுற்றி வந்தது. ஆடமின் அருகே ஏதோ செய்கை செய்தவாறு விடியும் வரை இருந்ததை அக்கேமரா காட்சிபடுத்தியது. இதற்குமேல் அங்கு இருக்க தைரியமில்லாது அவ்வீட்டை காலிசெய்து கிளம்பினார்.

இதனையும் ட்வீட் செய்து பரபரப்பாக்கினார் ஆடம். இது ஒரு ஹாலிவுட் படமாக கூட வந்தது.



பங்கார்க்ட் கோட்டை

அமானுஷ்ய அனுபவம்: 14

பங்கார்க்ட் கோட்டை:

ராஜஸ்தான் மாநிலம் ஹல்வார் மாவட்டத்தில் உள்ளது இக்கோட்டை. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டு நடுவில் இக்கோட்டை உள்ளதால் இயல்பாகவே இங்கு சூரிய ஒளி குறைவாகவே வருகிறது. ஆகவே பகலிலும் இங்கு இருள் சூழ்ந்துவிடுகிறது. அக்பரின் அமைச்சர் மன் சிங்கின் சகோதரர் மாதோசிங் என்பவரால் 17ம் நூற்றாண்டில் இக்கோட்டை கட்டப்பட்டது. 

சூரியன் மறைய ஆரம்பித்ததும், இக்கோட்டைக்கு எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. சுற்றுலாப்பயணிகளை மாலை4 மணிக்குமேல் அரசாங்கமே அனுமதிப்பதில்லை, அதற்குமேல் எவரும் இங்கு தங்ககூடாதென அரசே அறிவுறுத்துகிறது! காரணம் அந்த கோட்டைக்குள் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இரவு நேரங்களில் பங்கார்த் கோட்டைக்குள் யாரோ நடனமாடுவது போன்றும் கத்துவது போன்றும் சத்தங்கள் வருவதாக அந்த பகுதியில் வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். அதோடு இரவு நேரங்களில் அந்த கோட்டைக்குள் சென்ற பலர் இதுவரை வெளிவரவில்லை எனவேஅது குறித்த புகார்கள் போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.இப்படி பல புகார்கள் வந்ததை அடுத்து, பிரச்சனைகளை தவிர்க்கவே, இரவு நேரங்களில் அந்த கோட்டைக்குள் மக்கள் யாரும் செல்லக்கூடாது என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எச்சரிக்கை பலகையும் கோட்டை முகப்பில் மாட்டியுள்ளனர்.

ஒரு சூனியக்காரனாலே இக்கோட்டை பேய்க்கோட்டையாய் மாறியதாய் கூறுகின்றனர். இக்கோட்டையின் இளவரசியின் அழகில் மயங்கி அவளை மணக்க விரும்பிய மந்திரவாதி, சதி செய்து, இளவரசியை அடைய எண்ணும் வேளையில் ஒருவிபத்தில் இறக்க, சபித்து விட்டு இறக்கிறான். ஆகவே அங்கு நடந்த போரில் கோட்டை நாசம் செய்யப்படுகிறது. இளவரசியும் கொல்லப்படுகிறாள். அதன்பின் அங்கு மக்கள் குடியேற்றம் இல்லாது, அன்று முதல் கவனிப்பாரின்றி அமானுஷ்ய சக்திகள் சூழ்வதாய் அருகேயுள்ள குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர். வரலாறு ரீதியாய் ராஜபுத்திரரும், முஸ்லீம்களும் அடிக்கடி போரிட்டுள்ளனர். அதைபோல் அக்பர் காலத்திற்கு பின் நடைபெற்ற போரில் நிறைய ராஜபுத்திரர் இக்கோட்டையில் வெட்டி வீழ்த்தப்பட்டு சடலங்களை கூட அப்புறப்படுத்த இயலாது அவசரகதியில் இக்கோட்டையை காலிசெய்து கிளம்பியிருக்க வேண்டும். அதைபோல் புறக்கணிக்கப்பட்ட இந்நகரில் கிடந்த பிணங்களின் கணக்கற்ற எழும்புக்கூடுகளை கண்டு பின்னால் வந்த மக்களும் இக்கோட்டையை புறக்கணித்துவிட்டனர். 

மாலை நான்கு மணிக்குள் இவ்வூர் அடங்கி விடுகிறது. அதனால் சுற்றுலாப்பயணிகளும் வருவதில்லை. அதையும் மீறி இங்கேவரும் பயணிகளை உள்ளூர் வாசிகள் கண்டுகொள்ளாது விட்டுவிடுகின்றனர். நிறைய சுற்றுலாவாசிகள் வீம்பிற்கு பாதிதூரம் சென்று பயம் காரணமாய் தெறித்து ஓடிய சம்பவங்களும் உண்டு. இக்கோட்டையின் பல வாயிற்களை இன்னும் முழுமையாக அறிய முடியவில்லை. கண்டுபிடிக்கப்படாத விஷயங்கள் பல இக்கோட்டைகள் உள்ளன. பல பாதாள அறைகள் தூர்ந்துபோய் அடைபட்டு கிடக்கிறது. இயல்பாகவே இருண்ட இவ்வறைகளை மேற்கொண்டுபோய் பார்க்க தைரியம் இல்லாததால் பல அமானுஷ்யங்கள் இக்கோட்டைக்குள் மறைந்து கிடக்கிறது.






அமானுஷ்ய அனுபவம் 13

அமானுஷ்ய அனுபவம்: 13

புதுக்கோட்டையிலுள்ள நல்ல அழகிய கிராமம் அது. அங்கே ஓர் நல்ல வசதியான குடும்பம் வசித்தது. அழகிய இரு பெண்கள், செல்வங்கள் என சந்தோஷத்துடன் கழிந்தது அக்குடும்பத்திற்கு. அக்குடும்பத்தின் மூத்தமகளுக்கு வரண்பார்த்து திருமணம் முடிக்கும் நிலையில் திடீரென தூக்கு மாட்டி அப்பெண் இறக்க வீடே சோகத்தில் மூழ்கியது. எதனால் அவள் இறந்தால் என குடும்பத்தினருக்கும் தெரியவில்லை. செல்வமகள் இறந்ததால் தங்கள் சொந்த வீட்டை காலி செய்து வேறு நகரில் குடியேறினர்.

பூட்டியிருந்த அவ்வீட்டிற்கு மூன்றுமாதம் கழித்து ஒரு இளம் தம்பதியினர், இவ்விஷயத்தை கேள்விப்படாமல் குடியேறினர். ஒருவாரம் நன்றாக போனது, மறுவாரத்தில் கணவர் இரவுப்பணி செல்ல தனியாக இருந்த மனைவிக்கு இரவில் அழுகுரல் கேட்டது. அதுவும் வியாழன் அன்று மட்டுமே. நேரம் செல்ல செல்ல அக்குரல் இம்சித்தது. அன்று இரவு முழுவதும் அக்குரல் அமானுஷ்யத்துடனே நடுங்கிய மனதுடன் முழித்திருந்தாள் அவள். பின் கணவர் வந்தவுடன் கதறியபடி நடந்ததை கூறினாள். பூனையின் சத்தம் சிலசமயம் அழுகைக்குரலாய் கேட்கும் பயப்பட வேண்டாம் என கூறி, இருநாள் விடுப்பு எடுத்து தங்கினார். சத்தம் ஏதும் கேட்காததால், இது மனப்பிரம்மையே என கணவன் கருதினான். மறுவாரம் காலைப்பணி ஆதலால் இரவு மனைவியுடன் தங்கினார். புதன்கிழமை வரை தொல்லையில்லாத இரவு, வியாழக்கிழமை தூங்காஇரவு ஆனது. மீண்டும் அக்குரல் மெல்ல விசும்ப ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக அக்குரல் இருவரையும் இம்சிக்க ஆரம்பித்தது. இருவரும் நடுங்கியபடி வீடு முழுக்க அலசினர். அக்குரல் ஓயவேயில்லை. முதல்வேலையாக மறுநாளே வீட்டை காலி செய்தனர்.

அவ்வீட்டிற்கு அருகே ஒரு தம்பதியினர் வசித்தனர். நன்றாக போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை, ஒருநாள் திடீரென தன் அருகே படுத்திருந்த மனைவியை காணாது, கணவன் தேடினான், வீடு முழுக்க காணவில்லை. அவரது குடும்பமே ஊர்முழுக்க தேடியது அவள் சிக்கவேயில்லை. தன் வீட்டின் எதிரே சாத்தியிருந்த வீடுமட்டுமே பாக்கி! அதன் காம்பவுன்டு சுவர் மட்டும் திறந்திருக்க, மெலிதான சந்தேகத்தில் பயத்துடன் உள்ளே போக, அங்கே வீட்டின் வாசலில், முடியில் முகத்தைபுதைத்து அழுதுகொண்டிருந்தாள் அவள் மனைவி. அதன்பின் புதுக்கோட்டையில் பேய் ஓட்டுவதில் பிரசித்தமான கீழப்பழுவாஞ்சி போய், அவளுக்கு பிடித்தது பேய்தான் என கண்டறிந்து, சில சடங்குகள் செய்து அவ்வீட்டை உடனடியாய் காலிசெய்து கிளம்பினர்.

இழுப்பூரிலிருந்து அவ்வூரில் டீகடை புதிதாக ஆரம்பித்தார் ஒருடீக்கடைகாரர். பூட்டியிருந்த வீட்டின் கதையை கேள்விப்படாமல், வீடு பெரிதாக வாடகை குறைவாக உள்ளதே என குடும்பத்துடன் குடியேறினார். தொடர்ச்சியாக மூன்று வியாழக்கிழமைகளில் அவரின் மனைவி கனவில் ஒரு பெண்தோன்றி 'நான் ஒன்றும் செய்யமாட்டேன்' என ஓரிரு வார்த்தை மட்டும் கூறிச்சென்றாள். கனவரிடம் இதைகூற இதை அவரும் பொருட்படுத்தவில்லை. ஒருநாள் கடைப்பணி முடித்து கொஞ்சம்தாமதாய் வீட்டிற்கு செல்ல மாடிப்படியில் ஓர் பெண் அமர்ந்துள்ளதை கண்டு அது மனைவியின் உறவினர் போலும் என சிரித்துக்கொண்டே படிகளில் ஏறிக்கொண்டே அவளிடம் பேசிக்கொண்டிருக்க, மேலிருந்த மனைவி கனவரின் குரல் கேட்டு எட்டிபார்க்க! 'யார்ட்ட பேசுறீங்க இந்நேரத்துல' என வினவ, மேலே மனைவியை பார்த்துவிட்டு படிக்கட்டில் பார்த்தால் அப்பெண்ணை காணவில்லை. மறுநாள் அவரது மகனுக்கு இவ்வீட்டின் வரலாறு தெரிய ஆரம்பிக்க. உரிமையாளருடன் சண்டையிட்டு அவரும் வீட்டை காலிசெய்தார்.

இன்றுவரை அவ்வீடு பூட்டியே கிடைக்கிறது. இன்னும் இவ்வீடு தொடர்பாய் சில சம்பவங்கள் நடந்தேறியுள்ளது.

தகவலாளி: Francis Edison X

காளிதேவி தரிசனம்

அமானுஷ்ய அனுபவம்-16 காளிதேவி தரிசனம் : Disclaimer : இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விஷயம் தான், எனக்கும் இதுல அனுபவம்லா இல்லை, பிருங...