புதுக்கோட்டையிலுள்ள நல்ல அழகிய கிராமம் அது. அங்கே ஓர் நல்ல வசதியான குடும்பம் வசித்தது. அழகிய இரு பெண்கள், செல்வங்கள் என சந்தோஷத்துடன் கழிந்தது அக்குடும்பத்திற்கு. அக்குடும்பத்தின் மூத்தமகளுக்கு வரண்பார்த்து திருமணம் முடிக்கும் நிலையில் திடீரென தூக்கு மாட்டி அப்பெண் இறக்க வீடே சோகத்தில் மூழ்கியது. எதனால் அவள் இறந்தால் என குடும்பத்தினருக்கும் தெரியவில்லை. செல்வமகள் இறந்ததால் தங்கள் சொந்த வீட்டை காலி செய்து வேறு நகரில் குடியேறினர்.
பூட்டியிருந்த அவ்வீட்டிற்கு மூன்றுமாதம் கழித்து ஒரு இளம் தம்பதியினர், இவ்விஷயத்தை கேள்விப்படாமல் குடியேறினர். ஒருவாரம் நன்றாக போனது, மறுவாரத்தில் கணவர் இரவுப்பணி செல்ல தனியாக இருந்த மனைவிக்கு இரவில் அழுகுரல் கேட்டது. அதுவும் வியாழன் அன்று மட்டுமே. நேரம் செல்ல செல்ல அக்குரல் இம்சித்தது. அன்று இரவு முழுவதும் அக்குரல் அமானுஷ்யத்துடனே நடுங்கிய மனதுடன் முழித்திருந்தாள் அவள். பின் கணவர் வந்தவுடன் கதறியபடி நடந்ததை கூறினாள். பூனையின் சத்தம் சிலசமயம் அழுகைக்குரலாய் கேட்கும் பயப்பட வேண்டாம் என கூறி, இருநாள் விடுப்பு எடுத்து தங்கினார். சத்தம் ஏதும் கேட்காததால், இது மனப்பிரம்மையே என கணவன் கருதினான். மறுவாரம் காலைப்பணி ஆதலால் இரவு மனைவியுடன் தங்கினார். புதன்கிழமை வரை தொல்லையில்லாத இரவு, வியாழக்கிழமை தூங்காஇரவு ஆனது. மீண்டும் அக்குரல் மெல்ல விசும்ப ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக அக்குரல் இருவரையும் இம்சிக்க ஆரம்பித்தது. இருவரும் நடுங்கியபடி வீடு முழுக்க அலசினர். அக்குரல் ஓயவேயில்லை. முதல்வேலையாக மறுநாளே வீட்டை காலி செய்தனர்.
அவ்வீட்டிற்கு அருகே ஒரு தம்பதியினர் வசித்தனர். நன்றாக போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை, ஒருநாள் திடீரென தன் அருகே படுத்திருந்த மனைவியை காணாது, கணவன் தேடினான், வீடு முழுக்க காணவில்லை. அவரது குடும்பமே ஊர்முழுக்க தேடியது அவள் சிக்கவேயில்லை. தன் வீட்டின் எதிரே சாத்தியிருந்த வீடுமட்டுமே பாக்கி! அதன் காம்பவுன்டு சுவர் மட்டும் திறந்திருக்க, மெலிதான சந்தேகத்தில் பயத்துடன் உள்ளே போக, அங்கே வீட்டின் வாசலில், முடியில் முகத்தைபுதைத்து அழுதுகொண்டிருந்தாள் அவள் மனைவி. அதன்பின் புதுக்கோட்டையில் பேய் ஓட்டுவதில் பிரசித்தமான கீழப்பழுவாஞ்சி போய், அவளுக்கு பிடித்தது பேய்தான் என கண்டறிந்து, சில சடங்குகள் செய்து அவ்வீட்டை உடனடியாய் காலிசெய்து கிளம்பினர்.
இழுப்பூரிலிருந்து அவ்வூரில் டீகடை புதிதாக ஆரம்பித்தார் ஒருடீக்கடைகாரர். பூட்டியிருந்த வீட்டின் கதையை கேள்விப்படாமல், வீடு பெரிதாக வாடகை குறைவாக உள்ளதே என குடும்பத்துடன் குடியேறினார். தொடர்ச்சியாக மூன்று வியாழக்கிழமைகளில் அவரின் மனைவி கனவில் ஒரு பெண்தோன்றி 'நான் ஒன்றும் செய்யமாட்டேன்' என ஓரிரு வார்த்தை மட்டும் கூறிச்சென்றாள். கனவரிடம் இதைகூற இதை அவரும் பொருட்படுத்தவில்லை. ஒருநாள் கடைப்பணி முடித்து கொஞ்சம்தாமதாய் வீட்டிற்கு செல்ல மாடிப்படியில் ஓர் பெண் அமர்ந்துள்ளதை கண்டு அது மனைவியின் உறவினர் போலும் என சிரித்துக்கொண்டே படிகளில் ஏறிக்கொண்டே அவளிடம் பேசிக்கொண்டிருக்க, மேலிருந்த மனைவி கனவரின் குரல் கேட்டு எட்டிபார்க்க! 'யார்ட்ட பேசுறீங்க இந்நேரத்துல' என வினவ, மேலே மனைவியை பார்த்துவிட்டு படிக்கட்டில் பார்த்தால் அப்பெண்ணை காணவில்லை. மறுநாள் அவரது மகனுக்கு இவ்வீட்டின் வரலாறு தெரிய ஆரம்பிக்க. உரிமையாளருடன் சண்டையிட்டு அவரும் வீட்டை காலிசெய்தார்.
இன்றுவரை அவ்வீடு பூட்டியே கிடைக்கிறது. இன்னும் இவ்வீடு தொடர்பாய் சில சம்பவங்கள் நடந்தேறியுள்ளது.
தகவலாளி: Francis Edison X

No comments:
Post a Comment