ஐகோர்ட் மகாராஜா:
"எளிய எளிய உயிரை
ஒரு வலிய ஒருவன் எடுத்தால்
நினைத்திடாத ஒரு நாள்
உன்னை எவனோ ஒருவன் முடிப்பான்
நேற்று செய்த தவறை
நீ மேலும் மேலும் செய்தால்
மேலே உள்ள அவனோ
உன்னை கீழே மிதித்து மிதித்து கொல்வான்.."
தூத்துக்குடி, திருநெல்வேலி பக்கத்தில் சாதி வேறுபாடின்றி பலருக்கும் குலதெய்வமாய் உள்ளவர் இவர். நிறைய டீ கடைகள், வாகனங்களில் "ஐ கோர்ட் மகாராஜா துணை" என்ற வாசகத்தை காணலாம். அவ்வளவு பிரபலம் இவர். சுடலைமாடன் எவ்வாறு ஐகோர்ட் மகாராஜா ஆனார் என்பதை காண்போம்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ளது ஆறுமுகமங்கலம் எனும் ஊர். இங்குள்ள சுடலைமாடனே ஐகோர்ட் மகாராஜா என்று வணங்கப்படுகிறார்.
ஆறுமுகமங்கல பகுதியில் சின்னான் என்கிற ஒரு நபர் வாழ்ந்துவந்தார். இவருக்கு பெற்றோர்கள் யாரும் கிடையாது. தனிமரமாய் அநாதையான இவர் அப்பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தார். அவர் ஒரு நாள் மாடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது. ஒரு அப்பாவியை இரண்டு நபர்கள் அரிவாளால் துரத்திக்கொண்டு வந்தனர். அப்போது ஒரு சுடலைமாடசுவாமி கோவில் அருகே அந்த இரு நபர்கள் அந்த அப்பாவியை வெட்ட முயன்றனர். அதற்கு அந்த அப்பாவி மனிதர் தன்னை வெட்ட வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சி பார்த்தார். சுடலை மாடன் பொல்லாத சாமி, அவர் முன்னே கொல்லாதீங்க, அது உங்களை சும்மா விடாது என கூறியும் பார்த்தார் ஆனால், அவர்கள் கேட்கவில்லை, இதை மறைவிலிருந்து பார்த்தான் சின்னான், பதைபதைத்து போனான், ஆனால் அவனால் அவர்களை தட்டி கேட்கும் தைரியமில்லை. தடுக்கவும் முடியவில்லை அவன் கண்முன்னே அந்த அப்பாவியை கொடூரமாய் சம்பவம் செய்தனர், அந்த இரு கொலைகாரர்கள். தலைவேறு கால்வேறு பிய்த்து எறிந்து சென்றனர். குற்றஉணர்வில் தவித்தான் சின்னான், உடனே ஓடிசென்று ஊராரிடமும், இறந்தவன் மனைவியிடமும் அழுதவாறு தெரிவித்தான். கதறி அழுதாள் இறந்தவனின் மனைவி, இவ்வழக்கை புகாரளியுங்கள் நான் வந்து கண்டிப்பாய் சாட்சி சொல்கிறேன் என சின்னான் கூறி சென்றான். வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்றது. சாட்சி சொல்ல தயாரானான் சின்னான், ஆனால் கொலையாளிகள் ஆள் வைத்து சின்னானை தூக்கி வந்து அடித்து துன்புறுத்தி மயக்க நிலையில் கட்டிவைத்து சென்றனர்.
நீதிபதி வழக்கை விசாரித்தார். முக்கிய சாட்சியான சின்னானை அழைத்தார். ஆச்சர்யமாய் அங்கு சின்னான் வந்தான். கொலையாளிகளுக்கு எதிராக ஆணித்தரமாய் சாட்சி சொல்லினார். கொலையாளிகள் திகைத்தனர். அடித்து துன்புறுத்தின காயமும் இல்லை. மயங்கி அவன் இந்நேரம் எழுந்திருக்க வாய்ப்பில்லை. உடனே தன்னுடன் வந்த ஆட்களை அனுப்பி சோதனை செய்ய சொல்லியனுப்பினர். அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. மயங்கிய நிலையில் அவர்கள் கட்டிவைத்தவாறே சின்னான் கிடந்தான். பின்னர் தான் அவர்களுக்கு தெரியவந்தது அன்று அந்த அப்பாவி சொன்னதுபோல் சுடலைமாடன் நேரில் வந்து சாட்சி சொல்லி கொலையாளிகளுக்கு தண்டனை கொடுத்து விட்டான் என அவர்களுக்கு புரிந்தது. அதன்பின்னர்தான் அப்பகுதியிலுள்ள சுடலைமாடன் கோவில் சுவாமி ஐகோர்ட் மகாராஜா எனும் பெயரால் அழைக்கப்பட தொடங்கினார்.
தவறு செய்தால் எவ்வளவு பெரிய ஆளாயினும் அவனை தண்டிப்பான் சுடலைமாடன் எனும் நம்பிக்கை இன்றும் இப்பகுதியில் நிலவி வருகிறது!
இக்கதை பிரிட்டிஷார் காலத்தில் நடந்ததாய் கூறப்படுகிறது.



No comments:
Post a Comment