தகவலாளி Francis Edison X
புதுக்கோட்டையில் ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் இது.ஒரு ரம்ஜான் நாளில் இஸ்லாமிய குடும்பங்கள் சந்தோஷமாய் மகிழ்ந்திருக்கையில் ஒரு நாய் மூலமாய் அந்த விபரீதம் நடந்தது.
வெறிமுத்திபோன அந்த நாய் 11 பேரை கடித்து வைத்தது. அதில் முக்கியமாய் பாத்திமா எனும் நடுத்தர வயது பெண்ணை கொஞ்சம் அதிகமாய் கன்னத்திலும் கடித்து வைத்தது. நாய்க்கடிக்கு பத்தியம் இருந்து வைத்தியம் பார்ப்பார்கள், அப்பெண்ணுக்கு இந்த வைத்தியம் ஏதும் பலிக்கவில்லை. நாளாக நாளாக அப்பெண்ணிற்கு நோய் முற்றியது. நாயினை போல வாயில் உமிழ்நீர் சுரக்க ஆரம்பித்தது. சில நாளில் நோய் இன்னும் முற்றியது! இரவில் நாயைபோல கத்த ஆரம்பித்தார். அவரது பழக்கமும் மாறியது. உடலில் முரட்டுத்தனம் ஏறியது. தலைமுடியை பிய்த்து எறிய ஆரம்பித்தார். அந்த தெருவிற்கு வரவே அனைவரும் பயந்தனர். அந்த வீட்டைச்சுற்றி நாய்கள் கூட்டமாய் கூடி கத்த ஆரம்பித்தது. வீட்டில் ஆள்வைத்து வைத்தியரை கூட்டி வந்தனர். வைத்தியம் பார்க்க அவரை விடவில்லை. வைத்தியர் ஊசிபோட முயல்கையில் அவரை அனுமதிக்காமல் அவ்வளவு முரட்டுத்தனம் பண்ணினாள் பாத்திமா. ஒருவாறு கடும்முயற்சி செய்து ஊசிபோட்டு விட்டார் வைத்தியர். ஆனால் அன்றிரவே இறந்துபோனாள் பாத்திமா. அடக்கம் செய்து முடித்து வந்தனர், ஊராரும் நிம்மதியாய் தூங்கினர்.
மறுநாள் அந்த தெருவில் மதினா எனும் பெண்மணியின் வீட்டுகதவை மூனு மணிக்கு யாரோ தட்டும் சப்தம் கேட்டது, கதவை திறந்தாள் மதினா. பர்தா அணிந்து அங்கு நின்றாள் பாத்திமா. என்னை ஊசிபோட்டு கொன்னுட்டாங்க மதீனாக்கா நீ அத கேட்கமாட்டியானு கேட்க, பதறியடித்து கதவையடைத்து கத்த தெருவே பரபரப்பானது. அதற்கு அடுத்து மூன்றுநாள் கழித்து அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பினார் அக்பர். ஏர்போர்ட் ஃபார்மாலிட்டி முடித்து வீட்டுக்கு வருகையில் நள்ளிரவு மணி 2 ஆனது. வீட்டுக்கதவை தட்டினார். அனைவரும் அசந்து தூங்கினர். சரி வெளியே படுக்கலாம் என திண்ணையில் போர்வையை விரித்து படுத்தார். பர்தா அணிந்து பாத்திமா வந்து, இவரிடம் நலம் விசாரித்து சென்றிருக்கிறார். இந்த சாமத்துல இங்க என்னக்கா பண்றீங்க? னு கேட்டிருக்கார். அது உனக்கு சொல்லனும்னு அவசியம் இல்லைனு கோவத்தோடு பாத்திமா கிளம்பினார். அதன்பின் அசந்து தூங்கினார். காலை விடிந்ததும் அக்பரை வீட்டினர் வரவேற்றனர். குளித்துமுடித்து இரவு நடந்ததை சொல்லி, பாத்திமாக்கா ஏன் நைட்ல தனியா நடந்து அந்நேரம் போறாங்கனு இவர் சொல்ல வீடே அதிர்ந்து போனது. இவ்வாறு கிட்டத்தட்ட 10 சம்பவங்கள் மேல் நடந்தது.
அதன்பின் இறுதியாக வெளியூரிலிருந்து ஊருக்கு வந்த இளம்பெண்ணின் மேல் பாத்திமா இறங்க! அப்பெண் வீட்டையே களேபரபடுத்தினாள். இரவில் வாயிலிருந்து நாய்போல நீர் சுரந்தது. கண்கள் மேலே சொருகி, மிருகத்தனமானாள் அவள். அவர் கிறிஸ்தவ மதம் சார்ந்தவரார் ஆதலால் மணப்பாறை அருகே ஓர் அந்தோணியார் கோவில் அழைத்து சென்று பிரசன்னம் பார்த்தனர். அந்த பாதிரியார் சில விஷயங்களை கண்டறிந்தார். இறந்துபோன பாத்திமாவின் உடலை சரியாக குழியில் புதைக்கவில்லை. மறுநாள் பெய்த மழையில் பிரேதம் வெளியே வர, பாத்திமாவின் ஆவி அவளது வீடுநோக்கி சென்றது தெரிய வந்தது.ஆனால் அங்கே அவளது வீட்டில் வெள்ளெருக்கு வேரினால் வீட்டைச்சுற்றி குரான் ஓதி மந்திரித்து ஒரு கட்டு கட்டியுள்ளனர்.ஆகவே அவளால் உள்ளே நுழைய முடியாமல் தெருவில் அலைகிறாள், அவளது ஆவியே இந்த பெண்ணின் உடலில் உள்ளது என கண்டறிந்தார். அதன்பின் மந்திரித்து அனுப்பி வைத்தார். அப்போதும் அப்பெண்ணின் அட்டகாசம் தொடர்ந்தது. வீட்டினர் செய்வதறியாது திகைத்தனர். மறுநாள் அவ்வூரின் புகழ்பெற்ற தீமிதி திருவிழா நடந்தது ஊரே திரண்டது. அப்போது அவ்வூரின் பூசாரி பட்டையார் என்பவரிடம் அப்பெண்ணின் தாயார் காலில் விழுந்து தன்பெண்ணை காப்பாற்றுமாறு கதறினார். உடனே அப்பெண்ணை அழைத்து வரச்சொன்னார். அம்மனின் குங்குமத்தை அப்பெண்ணின்மேல் வீசி இப்பெண்ணைவிட்டு நீங்கிசெல் அம்மா என வணங்கினார். உடனே அப்பெண் பால்கொண்டு வரச்சொன்னார். பின் அதன்மேல் இனிநான் இவ்வூரில் வரமாட்டேன் என சத்தியம் செய்து. ஊரார் முன்னிலையில் தொழுது உருதுமொழியில் குரான் மந்திரத்தை ஜெபித்தார். கிறிஸ்தவ பெண் எவ்வாறு சரளமாய் அரபி பேசுகிறாள் என ஊரே அதிர்ச்சியில் உறைந்தது! சிறிதுநேரத்தில் அந்த இளம்பெண் மயங்கி சரிந்தாள். அதன்பின் அவளது சமாதியை நன்றாக மூடி அடக்கம் செய்தனர் அக்குடும்பத்தினர்.
அன்றிலிருந்து இன்றுவரை பாத்திமாவின் ஆவி இதுவரை ஊரில் தென்படவில்லை.

No comments:
Post a Comment