சுடலை மாடன்:
பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்களை
1.குடும்ப தெய்வம்
2.குலதெய்வம்
3.ஊர்தெய்வம்
4.பெருந்தெய்வம் என வகைப்படுத்தலாம்.
குடும்பதெய்வ வழிபாடு பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் வணங்கும் வழக்கம் உள்ளது. வாழ்வாங்கு வாழ்ந்து மடிந்த தம் குடும்பத்தாரை நினைத்து அமாவாசை தோறும் வழிபடுவதை இன்றும் காணலாம்.
குலதெய்வம் என்பது ஒரேகுலத்தில் பிறந்த அண்ணன், தம்பியாகிய பங்காளிகள் வணங்குவதே குலதெய்வ முறை. மூத்த சகோதரர்கள் முதல்கொத்தில் அடங்குவர். பங்காளிகளின் எண்ணிக்கை பொறுத்து கொத்துகளின் எண்ணிக்கை கூடும் குறையும். சில கொத்துகளில் ஆண் வாரிசோ, அல்லது குழந்தைப்பேறோ இல்லாவிடில் அக்கொத்து அப்படியே முறிந்துவிடும். நாளாக நாளாக அக்கொத்துகளில் வம்சவிருத்தி இல்லையெனில் அக்குலதெய்வம் தனிமைபடுத்தப்பட்டு சக்தியினை இழக்கும் என்பது ஒரு கருத்து.
ஊர்தெய்வம் என்பது ஐய்யனார், பிடாரி, செல்லாயி போன்ற தெய்வங்களை குறிக்கும் இத்தெய்வங்களை ஊரின் அனைத்து சாதியினரும் வணங்குவர். அனைத்து சாதியினருக்கும் ஒவ்வொருநாள் விதித்து மண்டகப்படி வழங்கப்படும்.
பெருந்தெய்வம் என்பது சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், காணாபத்யம்,ஸ்மார்த்தம் போன்ற நெறிகளில் உந்தப்பட்டு நிலையான கோவிலையெழுப்பி வணங்கப்படுதல்.
சுடலைமாடன் தோற்றம்:
சுடலைமாடன் தோற்றத்திற்கு வழங்கப்படும் புராணம் பிற்சேர்க்கைகள் பல நிறைந்தது. சுடலை+மாடன் இரண்டும் ஒன்று என்றும் வேறுவேறு எனவும் இரு கருத்துகள் உண்டு. ஆரம்பகாலத்தில் லிங்கவழிபாடு கற்களாலான லிங்கத்திற்கு முன்பு சுதையினாலும், மரத்தினாலுமே வணங்கினர். இதனை கந்து எனவும் வழங்குவர். கிட்டத்தட்ட சுடலையின் உருவமும் இவ்வாறே இருக்கும். சுடலையின் புராணகதைகூட சிவனைஒட்டியே வருவது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக தமிழ்த்திருமுறையில்
"காடுடைய சுடலைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்" சுடுகாட்டை காவல் காக்கும் கணங்களின் தலைவனாக, சுடுகாட்டின் காவலனாய் சுடலை கருதப்படுகிறார். ஆநிரை மீட்கும் கரந்தைப்போரில் இறந்த வீரனுக்கு நடுகல் எடுக்கும் பழக்கம் நம் தமிழரிடையே மூவாயிரம் வருடமாய் இருந்துள்ளது. அந்நடுகல் வழிபாட்டின் நீட்சியே மாடன் வழிபாடு என கருதப்படுகிறது! இத்துடன் மயானத்தை காத்துவரும் சுடலையையும் இணைத்து மக்கள் சுடலைமாடனாய் வழிபடுகின்றனர் என்பது இனவரைவியல் ஆய்வாளர்களின் கருத்து.
சுடலை கொடைவிழா:
பெரும்பாலும் பங்குனி, ஆடி மாதமே கோவில் கொடை நடைபெறும். மக்கள் நோன்பு நோற்று அருகேயுள்ள நீர்நிலைகளில், கரகத்தில் நீர்கொண்டுவந்து சுடலைக்கு திருமுழுக்கு செய்வர். வழிபாட்டுக்கு பிச்சி, மல்லிகை முதலான வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரிப்பர். நேர்ச்சை கொண்ட மக்கள் பாலால் அபிஷேகம் செய்வர். முழுவாழைத்தார், பொரி, வயலில் விளைந்த உணவினை படைப்பர். பீடி, சுருட்டு, சாராயமும் படைக்கப்படும். உயிர்ப்பலியும் உண்டு கோழி, ஆட்டினை படைப்பர். பின்னர் தூபம், தீப வழிபாடு நடைபெறும், மேளதாளம் கொட்ட கொட்ட அருள்வந்து சாமியாடுவர். சங்க இலக்கியம் கூறும் வெறியாட்டு நிகழ்வே இது. அதன்பின் பூசாரியிடம் அருள்கேட்கும் வைபவம் நடைபெறும். இது முடிந்தவுடன் பெண்கள் குழந்தைகளை அப்புறப்படுத்தி 'சாமக்கொடை' நடைபெறும். இவையாவும் அனைத்து சுடலைமாடனுக்கும் நடைபெறும் பொதுவான வைபவங்கள். இப்போது சுடலையை வணங்கும் முறையினை காண்போம்.
சுடலை கோவில் கொடை:
சுடலையை சுற்றி சிறியதாய் ஐந்து கற்களை நட்டுவைத்து அவற்றிற்கும் விளக்கேற்றி வணங்குவர் அந்த தெய்வங்களை 1.பேச்சியம்மன்2.பிரம்மசக்தி3.உச்சிமாகாளி 4.இசக்கியம்மன்5.சப்பாணி என்று அழைத்து வழிபாடு நடக்கும்.
சுடலையின் அலங்காரப்பெட்டி அருகேயுள்ள பூசாரி வீட்டில் இருக்கும். கோவில்கொடை நடக்கும் சமயம், அவர் வீட்டிலிருந்து தலையில் தூக்கிவைத்து மேளதாளங்கள் முழங்க அழைத்து வருவர். அப்பெட்டியினுள் சாமியின் உடை, வளரி, மணி, குத்துவாள் போன்றவை இருக்கும். சுடலையை அருகேயுள்ள குளத்திலுள்ள நீரினை கொண்டு நீராட்டி, அலங்காரபெட்டியிலுள்ள பொருட்களை கொண்டு சாமியை அலங்கரித்து வணங்குவர் அதன்பின் பொங்கல் வைத்து படைத்தவுடன் கிடா, கோழியினை பலியிட்டு தலையை சாமிக்கு அருகில் வைப்போம். அதன்பின் சாமியாடிக்கு அருள்வரும். பங்காளிகள் வரிசையாய் நின்று உத்தரவு குறிகேட்கும் வைபவம் நடைபெறும். அதன்பின் வெட்டிய ஆடு, கோழியை சமைத்து, படைத்து அங்கேயே உண்ணுவர். அவற்றை வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்பது ஐதீகம்.
பெரும்பாலும் இவ்வைபவம் முடிந்ததும், உறவினர் வீட்டுக்கு சென்று ஒய்வெடுப்பர். அதன்பின் சாமக்கொடை நடைபெறும், பெண்கள் குழந்தைகள், ஒரு குறிப்பிட்ட எல்லைவரை வருவர்.அதற்கு மேல் அனுமதி கிடையாது. சுடலைவேடமணிந்து சாமியாடியை அழைத்து வருவர். மேளம், கொட்டு முழங்க அதன்பின் கையில் தீப்பந்தம் ஏந்தி, "பிணந்திண்ணி வேட்டை" நடைபெறும், சுடுகாடுநோக்கி ஒருகையில் வல்லயம், மறுகையில் தீப்பந்தம் ஏந்தி சாமியாடிக்கொண்டே செல்லுவார் சுடலை. அவருடன் சிலர் பந்தம் ஏந்தி உடன் செல்லுவர். உடன் மேளம்கொட்டுவரும் செல்வர். பின்சுடுகாட்டில் குழிதோண்டி புதைத்த பிணத்திலிருந்து எழும்பை பிடுங்கி திண்ணுவார்( ஈசனை வணங்கும் முறையான காபாலிக மதத்தின் நீட்சியாய் இது தோன்றுகிறது) உடன்வருவோர் இறந்த பூதவுடல் சாமியாடியை தாக்கும் என கருதி அங்கு ஓர் கோழியை அறுத்து உயிர்ப்பலியிடுவார். அதன்பின் வேட்டை முடிந்ததும் சுடலையின் எல்லைப்பகுதியில் சாமியாடியின் தலையைச்சுற்றி முட்டை வீசப்படும். அதிலிருந்து கோவில்வரை முட்டிகாலிட்டு தலைகுனிந்தே சாமியாடி வருவார். அதன்பின் உடுக்கை மேலும் முழங்க ஒருகனம் பேச்சியம்மன் சாமியாடியின் மேல் வருவார்.இதனை கணியன் உடுக்கை அடிப்பவரிடம் கூறுவார். அப்போது அவர்மேல் புடவை சார்த்தப்படும். இதுமுடிந்ததும் சாமக்கொடைக்கு நேர்ந்தவர்கள் கிடாவை பலியிடுவர் சாமியாடி கிடாவின் ரத்தத்தை குடித்து, ஆட்டினை கீறி ஈரலை உண்ணுவார்.அதன்பின் படையல் உணவு சாப்பிட்டு சாய்ந்ததும். விழா நிறைவு பெறும்.
இந்த குலதெய்வ வழிபாட்டு முறையிலேயே நம் பண்பாடு மறைபொருளாய் ஒழிந்துள்ளது.


No comments:
Post a Comment